தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து, கடந்த காலத்தில் நாட்டை வழிநடத்தியது போல் உதவுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (26.12.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போதைய நாடாளுமன்றத்திற்கு வருவதில் எந்தவித ஆர்வமும் இல்லை எனவும், அது தொடர்பில் அவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

“இந்த நாடாளுமன்றத்திற்கு வருவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க என்னிடம் கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஏதாவது செய்யக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தற்போது உள்ள உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்,” என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும், “நான் ஜனாதிபதி பதவியை அடைந்துவிட்டேன். இனி எந்த பதவிகளையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாட்டிற்கு எனது உதவி தேவைப்பட்டால், கடந்த முறை போல வந்து உதவ தயாராக இருக்கிறேன்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தாம் செல்லும் பல இடங்களிலும் மக்கள் ரணில் விக்ரமசிங்க மீது அனுதாபம் தெரிவிப்பதாகவும், “அவர் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது”, “நாட்டில் சிறந்த சூழ்நிலை உருவாகியிருக்கும்” என மக்கள் கூறுவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளிலும் இதே கருத்து பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading