நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சம்பவம் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமையே இவ்வாறான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 கைதிகளை மட்டுமே தங்கவைக்கக்கூடிய வசதி இருந்தபோதிலும் தற்போது 2,000-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கழிவறை வசதிகள் கூட 250 முதல் 300 கைதிகளுக்கு ஒன்றே என்ற மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில கைதிகள் கழிவறைகளுக்குள்ளேயே உறங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை அதிகாரிகளும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் போதிய எண்ணிக்கையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இல்லாததுடன் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் கொடூரக் குற்றவாளிகளும் எந்தவித வகைப்படுத்தலும் இன்றி ஒரே இடத்தில் வைக்கப்படுவது வன்முறைகளை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்தச் சம்பவத்தை வெறுமனே போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையேயான மோதலாக சித்தரித்து உண்மையான கட்டமைப்பு பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் பிந்துனுவெவ வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலை சம்பவங்களின் போது போலவே பொறுப்பிலிருந்து விலக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.










Leave a Reply