நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த 60 கைதிகள் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் மையமாகக் கொண்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் நீர்கொழும்பு சிறையில் இருந்த கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு கட்டம் கட்டமாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக 60 கைதிகள் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் இடமாற்றம் தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலைகளில் அமைதியை நிலைநிறுத்த தேவையான மேலதிக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








Leave a Reply