நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் தகவல்கள்,இதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சக்திவாய்ந்த அரசியல் ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக முந்தைய காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோதல் கடந்த காலங்களில் பதிவான சம்பவங்களிலிருந்து வேறுபட்டதாக பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறைக்குள் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படும் ஒரு கைதியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 5ஆம் திகதி இரண்டு கைதிக் குழுக்களுக்கிடையில் கடுமையான மோதல் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் சுமார் 30 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து 6ஆம் திகதி காலை சிறைச்சாலை வழமைபோல் இயங்கிய நிலையில் மேலும் பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் சாதாரண உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட சில அதிகாரிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட சிறைச்சாலை மோதல் மட்டுமல்லாது இலங்கையின் சிறை நிர்வாகம் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அரச நிர்வாக அமைப்பில் உள்ள சவால்களை வெளிச்சமிட்டுக் காட்டும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளதாக பல தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.










Leave a Reply