நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலைத் தொடங்கிய சில கைதிகள் ஆயுதங்களைப் பெற்று இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் சிறைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் நுழையும் வழிமுறையைச் சீர்குலைப்பதே மோதலில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆயுதமற்ற இரண்டு சிறை அதிகாரிகள் முதலில் தாக்கப்பட்டதாகவும் அவர்களை மீட்க சென்ற பிற அதிகாரிகளும் செங்கற்கள் மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைச்சரவை அனுமதியுடன் சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர் தகவல் வழங்கிய கைதியே முதலில் தாக்கப்பட்டதாகவும் உணவு அல்லது தங்குமிடம் தொடர்பான பிரச்சினை காரணமாக அல்லாது மனிதாபிமானமற்ற வகையில் அதிகாரிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார். கைதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எவ்வாறு சென்றன என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலைமையை கட்டுப்படுத்தவும் உயிர்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்புப் படையினர் கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்தார்.










Leave a Reply