நாட்டின் நீதிக்கட்டமைப்பில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதியை துரிதப்படுத்த மோதல் முகாமைத்துவ தீர்வு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இன்று (01) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டில் உள்ள 333 நீதிமன்றங்களிலும் கீழ்நிலை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் சில வழக்குகள் விசாரணை நிறைவடைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலை நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் மாற்று மோதல் தீர்வு நடைமுறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். மேலும் சட்டத்தரணிகளின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஒரு மனிதக் கொலை வழக்கிற்கான சட்டச் செலவுகளை ஏற்க முதலில் காணியை விற்ற பின்னர் சிறுநீரகத்தையே விற்க முன்வந்த சம்பவத்தை எடுத்துக்காட்டியும் கவலை வெளியிட்டார்.
சட்டத்தரணிகளின் கட்டணத்தை கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கோ உயர்நீதிமன்றத்துக்கோ இல்லாததால் அவர்கள் மனசாட்சிக்கு அமைவாக நியாயமான கட்டணத்தை மட்டுமே அறவிட வேண்டும் என்றும், வசதியற்றவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி நீதியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட வலியுறுத்தினார்.









Leave a Reply