யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரை தொடர்பான வழக்கில் முக்கிய கட்டளை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியின் ஒரு பகுதி விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்த வீதியை மீட்கும் நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற பிரதேச சபைக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது தடை விதிக்கப்படுமா என்பது குறித்தே நீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வீதி அளவீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலியை அகற்றுமாறு விகாராதிபதிக்கு பிரதேச சபை அறிவித்திருந்தது. இதையடுத்து பலாலி பொலிஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வேலி அகற்றப்பட்டால் இனங்களுக்கு இடையிலான பதற்றம் ஏற்படக்கூடும் என தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் வலி வடக்கு பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக குறித்த வீதி மீட்கப்பட்டால் விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட சில காணிகளும் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணி உரிமையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Leave a Reply