தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு முன் அது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மதிப்பிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல முந்தைய அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பொறுப்பை தற்போதைய நிர்வாகம் சுமந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் பொறுப்பாக இருந்தாலும், குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பது போதுமானதல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகள், டெங்கு பரவல் விவசாயிகளின் சவால்கள் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும் என்றும் குறைபாடுகள் இருப்பதை மறுக்க முடியாவிட்டாலும் அவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அரசியல் இலாபங்களை நோக்கி தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் நடைமுறை தீர்வுகளையும் முன்வைப்பதே எதிர்க்கட்சியின் பொறுப்பாகும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.








Leave a Reply