முன்னாள் கூடுதல் அரச ஆய்வாளருக்கு லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABC) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தது.
நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கூடுதல் அரச ஆய்வாளருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சத் தொகையை செலுத்துவதற்கு சந்தேக நபர் அனுமதி வழங்கியதாகத் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், Continental Insurance Lanka Limited நிறுவனம், அரச ஆய்வாளர் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான D.H.L.W. ஜயமன்னாவுக்கு ரூ. 6,415,050 தொகையை வழங்கியுள்ளதாகவும் ஆணைக்குழு குற்றம்சாட்டியது.
சந்தேக நபர் ஊழலுக்கு துணை புரிந்ததும், அரச அதிகாரிக்கு பரிசளிப்பு வழங்கியதுமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆணைக்குழு, விசாரணைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால் அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையில், காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னிலை பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சந்தேக நபரும் நிறுவனமும் எந்தவிதமான லஞ்சச் செயலிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அவர் மேலும், Establishments Code-இன் படி, அரச ஆய்வாளர் திணைக்கள அதிகாரிகள் தனியார் சேவைகளை வழங்க சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி முன்னாள் கூடுதல் அரச ஆய்வாளரின் சேவைகள் முறையாக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியுள்ள இரண்டு தனிப்பட்ட பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்தார். மேலும், சாட்சிகளை பாதிக்கவோ, தலையிடவோ கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதிக்கு அழைக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.





Leave a Reply