அமெரிக்க மின்சார வாகன நிறுவனம் டெஸ்லா (Tesla) தனது ஆண்டு பங்குதாரர் கூட்டத்தில், தலைமை நிர்வாக அதிகாரி ஈலான் மஸ்க்கிற்கு (Elon Musk) வழங்கப்படவுள்ள மிகப்பெரிய ஊதியத் திட்டத்தை 75%க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் ஆதரித்து அங்கீகரித்துள்ளனர்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலகின் செல்வந்தரான மஸ்க், உலகின் முதல் டிரில்லியனராக (Trillionaire) மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மஸ்க் தற்போது நிறுவனத்தின் 15% பங்குகளை வைத்திருப்பவர். புதிய திட்டத்தின் கீழ், அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை என்றாலும், 423.7 மில்லியன் கூடுதல் பங்குகள் 10 ஆண்டுகளில் வழங்கப்படும்.
இந்த பங்குகளின் மதிப்பு, டெஸ்லா நிறுவனம் $8.5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டியால், சுமார் $1 டிரில்லியன் ஆகும். இதை அடைய, டெஸ்லா பங்கு விலை தற்போது இருப்பதை விட 466% உயர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, மஸ்க் பெறக்கூடிய பங்குகள் 12 பகுதிகளாக வழங்கப்படும், மேலும் நிறுவனம் நிர்ணயித்துள்ள செயற்பாட்டு மற்றும் நிதி இலக்குகளை அடைய வேண்டும்.
மஸ்க் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவித்து, “இது எனக்கு பெருமை அளிக்கிறது. உங்களின் நம்பிக்கையை மதிக்கிறேன்,” என்றார்.
மஸ்க் தனது உரையில், டெஸ்லாவின் எதிர்காலம் வெறும் மின்சார வாகனங்களில் அல்ல, ரோபோட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இருப்பதாகக் கூறினார்.
“டெஸ்லா ரோபோட்கள் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாக மாறும். ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த R2D2 அல்லது C3PO-வைப் பெற விரும்புவார்,” என்று மஸ்க் தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, இவ்வாறான மனித வடிவ ரோபோட்கள் $20,000க்குள் தயாரிக்கப்படலாம், மேலும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
டெஸ்லாவின் வருமானம் சமீபத்தில் குறைந்திருந்தாலும், மஸ்க் இதை பொருட்படுத்தாமல், “ரோபோட்களும் தானியங்கி வாகனங்களும்” தான் நிறுவனத்தின் எதிர்காலம் என வலியுறுத்தினார்.





Leave a Reply