யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீட்டொன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களும் கிராம உத்தியோகத்தரும் காவல்துறைக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும் ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதுடன் அவர் சங்கானையில் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.













Leave a Reply