அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விற்பனை விலையை ரூ.41 ஆகவும் ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ.42 ஆகவும் உயர்த்த தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இந்த விலை உயர்வுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பாளிகள் என குற்றம்சாட்டினார்.
மக்காச்சோள இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மக்காச்சோள உற்பத்தி முட்டைத் தொழிலின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் மக்காச்சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட மாற்றுப் பொருட்கள் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்பட்டதால் கோழிகளின் ஆரோக்கியமும் செரிமான அமைப்பும் பாதிக்கப்பட்டு முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சில மோசடி வியாபாரிகள் கால்நடைத் தீவனத்தில் இரசாயனங்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் அதிகளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் விவசாயிகள் கடுமையான நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் அறிந்திருந்த போதிலும் இதுவரை பயனுள்ள தீர்வுத் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.













Leave a Reply