நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய நடவடிக்கையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பாடசாலை மாணவர்கள் வழக்கமான சீருடையுடன் இணைந்து கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
தற்போதைய டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை வளாகங்களில் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றும் மற்றும் வளாகங்களை சுத்தப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை அதிக டெங்கு அபாயம் நிலவும் 60 டெங்கு மண்டலங்களை இலக்காகக் கொண்டு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நாளை முதல் விசேட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் மாணவர்களிடையே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.











Leave a Reply