இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அங்கீகரித்துள்ளது.
இந்த நிதி உதவி தொகை அரசு செலவின மேலாண்மையை வலுப்படுத்துவது, உள்ளூர் வருவாய் திரட்டலை மேம்படுத்துவது, மேலும் தனியார் துறையின் பங்குபற்றலை ஊக்குவிப்பது என்பவற்றில் கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ADB இலங்கை நாட்டுப் பணிப்பாளர் டகபுமி கடோனோ தெரிவித்துள்ளார்:
“இலங்கை தனது நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் பாராட்டத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தத் திட்டம் அரசு செலவினங்களின் நம்பகத்தன்மை மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதோடு, உள்ளூர் வருவாயை அதிகரிக்கும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான வெளிப்படையான சூழலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.”
இந்தத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீட்டின் வெளிப்படைத்தன்மை, பட்ஜெட் செயல்முறைகளின் திறன் மற்றும் வளங்களின் சிறந்த பயன்பாடு ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல வருட வரி இணக்கத்தன்மை திட்டம் மற்றும் சர்வதேச வரி ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உருவாக்கத்திற்கும் இத்திட்டம் ஆதரவாக இருக்கும். இது சமீபத்தில் இலங்கை உலக வரி வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் பரிமாற்ற மேடையில் உறுப்பினராக இணைந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய கூறாக, அரசு–தனியார் கூட்டாண்மை (PPP) களுக்கான புதிய சட்ட வடிவமைப்பு உருவாக்கப்படும். இது சர்வதேச தரநிலைகளுடன் இணைந்ததாக இருக்கும் என்பதோடு, காலநிலை நிதி மற்றும் தனியார் முதலீடுகளை முக்கிய துறைகளில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கையில் முதல்முறையாக பல புதுமையான முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில், முழுமையான நிதி ஆபத்து அறிக்கை (Fiscal Risk Statement), காலநிலை நிதி மூலோபாயம் (Climate Finance Strategy), பாலின சமத்துவ அடிப்படையிலான SDG பட்ஜெட் ஒதுக்கீடு, மற்றும் பொது கொள்முதல் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கைகள், அரசு நிறுவனங்களுக்கான கடன் ஆபத்து மேலாண்மை வடிவமைப்பு மற்றும் சிறப்பு கண்காணிப்பு பிரிவுகள் உள்ளிட்ட புதிய நிறுவன அமைப்புகளுடன் இணைந்து, இலங்கையின் நீடித்த பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என ADB தெரிவித்துள்ளது.





Leave a Reply