சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளரும் சட்டத்தரணியுமான நளின் பத்திரன முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மற்றும் நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் தொடர்ச்சியாக உயிரிழப்பது தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கட்சியின் காரியாலயத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான மரணப் பரிசோதனை அல்லது நீதவான் விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே அது தற்கொலை என ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியானது கவலைக்குரியது என்றும் இது குடும்பத்தினருக்கு அநீதி இழைப்பதோடு மக்களிடையே தவறான எண்ணத்தையும் உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தாஜுதீன் கொலை பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை நினைவுகூர்ந்த அவர் அண்மையில் 323 கொள்கலன் விவகாரத்தை முதலில் வெளிப்படுத்திய டான் பிரசாத் எயார்பஸ் ஒப்பந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரான கபில சந்திரசேன மற்றும் ரங்க ராஜபக்ஷ ஆகியோரின் மரணம் அல்லது தற்கொலை சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் அண்மையில் வழங்கிய வாக்குமூலத்தில் சாரா ஜாஸ்மின் மரணம் குறித்து பல டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான முக்கிய சாட்சியங்களை வழங்கியவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பின் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் நளின் பத்திரன வலியுறுத்தினார்.













Leave a Reply