இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்து செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது செம்மணி அகழாய்வில் இதுவரை 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் முன்னேற்றம் இல்லாதமை குறித்து கவலை வெளியிட்ட அவர் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்க சர்வதேச தடயவியல் நிபுணத்துவமும் தொழில்நுட்ப உதவியும் அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், காணாமலாக்கப்பட்டவர்கள் அதிகாரப் பகிர்வு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் பல்வேறு சர்வதேச ஜனநாயக அமைப்புகளுடன் நடைபெற்ற சந்திப்புகள் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமைச் சவால்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.







Leave a Reply