யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் இரண்டாம் பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் காணப்பட்ட மனித என்புக்கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கிய இந்த அகழ்வு நடவடிக்கைகள் மே 9ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வின் போது குறித்த என்புக்கூடு கண்டறியப்பட்டது. அதேவேளை புதைகுழி பகுதியில் செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவற்றை சுத்தப்படுத்தி ஆய்வு செய்யும் பணிகள் தொடர்வதால் உடனடி அடையாளப்படுத்தல் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரை மூன்றாம் கட்ட அகழாய்வின் 13 நாட்களில் 22 என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மூக்குத்தி, நாணய குற்றிகள், ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளிட்ட பல பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 262 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply