யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழு இன்று (22) விஜயம் மேற்கொண்ட நிலையில் மயானத்துக்கு வெளியே ஏ-9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்நாட்டு விசாரணை முறைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் எதிர்பார்த்த நீதியை வழங்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்த போராட்டக்காரர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அகழ்வாராய்ச்சியின் போது மனித எலும்புக்கூடுகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவது கடந்தகால மனித உரிமை மீறல்களின் தீவிரத்தைக் காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பிலான பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.













Leave a Reply