ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் எதிர்கொண்டு வரும் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. தற்போது எபோலா தொடர்பான சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளதாகவும் 139 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் WHO தெரிவித்துள்ளது. இதுவரை காங்கோவின் Ituri மற்றும் North Kivu மாகாணங்களில் 51 உறுதியான தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் உகாண்டா தலைநகர் Kampala-விலும் இரண்டு உறுதியான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. வைரஸ் கண்டறியப்படும் முன்பே பல வாரங்களாக சமூகத்தில் பரவி வந்திருக்கலாம் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக WHO இயக்குநர் Tedros Adhanom Ghebreyesus எச்சரித்துள்ளார்.
இந்த பரவல் Bundibugyo வகை எபோலா வைரஸால் ஏற்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை தற்போது இல்லை என்பது உலக சுகாதார அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது. மருத்துவ பணியாளர்களிடமும் தொற்று பரவியிருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோவின் மோதல் பகுதிகளில் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு காரணமாக கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் சிரமமடைந்துள்ளன. WHO இந்த பரவலை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதுடன் அவசர மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவி குழுக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகிறது.
WHO மதிப்பீட்டின்படி இந்த எபோலா பரவல் தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் “உயர் அபாயம்” கொண்டதாக இருந்தாலும் உலகளாவிய பரவல் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளது. இருப்பினும் எல்லை கடந்த மக்கள் நகர்வு மற்றும் நகர்ப்புறங்களில் தொற்று கண்டறியப்பட்டிருப்பது காரணமாக அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. பல நாடுகள் விமான நிலையங்கள் மற்றும் எல்லைச் சோதனை மையங்களில் சுகாதார கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.





Leave a Reply