போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும் மத்திய காசாவின் நுசெராத் அகதிகள் முகாமில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காசா முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆகவும் கடந்த 72 மணி நேரத்தில் 25 ஆகவும் உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுசெராத் அகதிகள் முகாமிலுள்ள அல்-அவ்தா மருத்துவமனை வெளியிட்ட தகவலின்படி அல்-பலதா சந்தைப் பகுதியில் இறுதி ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக அஹ்மத் யாசின் மசூதிக்கு வெளியே மக்கள் காத்திருந்த வேளையில் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில் பலர் காயமடைந்தும் உயிரிழந்தும் கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கடந்த 72 மணி நேரத்தில் சந்தைகள் இறுதிச் சடங்குகள் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி போர் நிறுத்த மீறல்களால் 1,127 பேர் உயிரிழந்ததுடன் 3,643 பேர் காயமடைந்துள்ளனர்.
2023 அக்டோபர் முதல் தொடரும் மோதல்களில் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 173,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் குடிமக்கள் உள்கட்டமைப்பின் பெரும்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













Leave a Reply