முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச சபை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில், கரைத்துரைப்பற்று பிரதேச சபையில் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் கடந்த நவம்பர் மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இதனையடுத்து புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இமக்குலேற்றா புஸ்பானந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அரசியல் சர்ச்சை
இந்த நிகழ்வு, தமிழர் பெரும்பான்மை கொண்ட ஒரு பிரதேச சபையை வரலாற்றில் முதன்முறையாக ஆளும் கட்சி கைப்பற்றியுள்ள சம்பவமாகக் கருதப்படுவதால், அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமையின்றி பிரிந்து நின்று போட்டியிட்டதே, தேசிய மக்கள் சக்தி இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் அரசியல் தலைமைகளின் மீது அதிருப்தி
இதேபோன்ற இரட்டை நிலைப்பாடுகள் அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தபோதும் வெளிப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்ந்து வெளிப்பட்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக ஆளும் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதுடன், தமிழ் அரசியல் தலைமைகளின் மீது பொதுமக்களிடையே நம்பிக்கையிழப்பு மற்றும் அதிருப்தி அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.





Leave a Reply