இலங்கையில் கடந்த பத்தாண்டுகளில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 2015 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120,000 வரை குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றார்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தச் சரிவு தீவிரமடைந்துள்ளதுடன் 2019-இல் பதிவான 319,010 பிறப்புகள் 2025-இல் 214,570 ஆகக் குறைந்து சுமார் 33 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. திருமண வயது அதிகரித்தல் திருமண விகிதம் குறைதல் வாழ்க்கைச் செலவு உயர்வு இனப்பெருக்க வயதுடைய இளைஞர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல் வேலைவாய்ப்பிற்காகத் தம்பதிகள் நீண்டகாலம் பிரிந்திருத்தல்
சிறிய குடும்பங்களை விரும்பும் போக்கு மற்றும் பெண்களின் உயர்கல்வி தொழில்வாய்ப்புகளில் அதிகரித்த பங்கேற்பு போன்றவை இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் புதிய குழந்தைப் பிறப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சாத்தியமான அனைத்து சலுகைகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.













Leave a Reply