வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த பாடலில் அத்தகைய எந்தவொரு உள்ளடக்கமும் காணப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது அமைச்சர்களாகவும் உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாக நினைவூட்டிய அவர் இன்று அதே சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க பயன்படுத்தப்படுவது கவலைக்குரியதாகும் என்றார். ஒரு பாடலுக்காக ஒருவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும் என்றும் இது வெறுமனே ஒரு எழுச்சிப் பாடல் மட்டுமே என்பதையும் அவர் வலியுறுத்தினார். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.













Leave a Reply