அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகத் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளர், நேற்று (22) காலை அவர் பணியாற்றி வந்த நிறுவன வளாகத்திற்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பலாங்கொடை நகர சபைக்கு போட்டியிட்ட ஸ்ரீரன் கோசல டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான துப்பாக்கிச் சூடு

நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அதன்படி, முதலில் துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றபோது, கைத்துப்பாக்கி இயங்காத காரணத்தால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், இலக்கு வைக்கப்பட்ட நபர் அவரைத் துரத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மிகக் குறுகிய நேரத்திற்குள் வேறொரு துப்பாக்கியுடன் மீண்டும் வந்த துப்பாக்கிதாரி, கோசல டி சில்வாவை இலக்காக வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் கோசல டி சில்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மீட்பு

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பின்னர் அந்தாகல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

முன்னைய குற்றச்சாட்டுகள்

விசாரணைகளில், உயிரிழந்த கோசல டி சில்வா 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், களுத்துறை எதனமடல பகுதியில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகத் தலைவர் சமயங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாகக் கூறி, இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதாள உலக தொடர்புகள்

கொலை செய்யப்பட்டவரின் கைப்பேசி ஆய்வில், அவர் பூசா சிறையில் உள்ள லோகு பெட்டி எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினருடன், கொலை நடைபெற்றதற்கு முந்தைய இரவும் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனுடன், கரந்தெனிய சுத்தா, கொஸ்கொட சுஜி உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகக் குழுக்களுடன் அவர் நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்ததாகவும், பலரின் பணப் பரிமாற்றங்களை இவர் கையாள்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை தொடர்கிறது

இந்த நிலையில், இந்த கொலையை எந்தக் குழு மேற்கொண்டது என்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading