கனடாவின் ஓட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அதிர்ச்சிகரமான குடும்பக் கொலை வழக்கில், இலங்கை மாணவர் ஃபெப்ரியோ டி சொய்ஸா (20) குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் நான்கு குழந்தைகள், அவர்களின் தாய் மற்றும் குடும்ப நண்பரை குத்திக் கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். மேலும், குடும்பத் தந்தை தனுஷ்க விக்கிரமசிங்க மீது நடந்த தாக்குதலுக்காக கொலை முயற்சி குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் 2024 மார்ச் 6ஆம் தேதி ஓட்டாவாவின் பார்ஹேவன் (Barrhaven) பகுதியில் நடந்தது. அப்போது, டி சொய்ஸா ஒரு சர்வதேச மாணவராக, விக்கிரமசிங்க குடும்பத்துடன் அவர்களின் அடித்தள அறையில் தங்கியிருந்தார்.
அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, மறுநாள் ஆறு கொலை குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இன்று (வியாழக்கிழமை) அவர் தனது வழக்கறிஞர் இவான் லைட்லுடன் (Ewan Lyttle) ஓட்டாவா உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்வரும் நான்கு பேரைக் கொன்றது குறித்து முதல் நிலைக் கொலை (First-degree murder) குற்றத்தை ஒப்புக்கொண்டார்:
- ரணயா விக்கிரமசிங்க (3 வயது)
- அஷ்வினி விக்கிரமசிங்க (4 வயது)
- இனுகா விக்கிரமசிங்க (7 வயது)
- கமினி அமரகோன் (40 வயது, குடும்ப நண்பர் மற்றும் குடியிருப்பாளர்)
இந்த நான்கு கொலைகளுக்காக 25 ஆண்டுகள் பரோல் இல்லாத ஆயுள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தாய் தர்ஷனி ஏகநாயக்கே (35) மற்றும் இரண்டு மாத குழந்தை கேலி விக்கிரமசிங்க ஆகியோரின் கொலைகளுக்கு இரண்டாம் நிலைக் கொலை (Second-degree murder) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு, ஓட்டாவாவின் வரலாற்றிலேயே மிக அதிர்ச்சிகரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கனடாவைத் தவிர, இலங்கையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
டி சொய்ஸா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், விக்கிரமசிங்க குடும்பம் தமக்கு எப்போதும் நல்லவர்களாக இருந்ததாகக் கூறி, பணமின்மை, படிப்பில் தோல்வி மற்றும் நாடு திரும்பும் பயம் காரணமாக அவர் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அவர் ஆன்லைனில் வாங்கிய 38 செ.மீ வேட்டைக்கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், கொலைக்குப் பிறகு வீட்டில் சில மணி நேரங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு, கடுமையாக காயமடைந்த தனுஷ்க விக்கிரமசிங்க அண்டை வீட்டிற்கு ஓடி உதவி கேட்டதுடன், காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
ஓட்டாவா நீதிமன்றம் இன்று தண்டனையை உறுதி செய்தது. அனைத்து கொலைகளுக்கும் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
டி சொய்ஸா நீதிமன்றத்தில், “நான் செய்ததை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொண்டு வாழ்வேன்” எனக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.





Leave a Reply