ஈஸ்டர் தாக்குதல் மரண தண்டனை, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றவாளி என பெரும்பான்மை நீதியரசர்கள் தீர்மானித்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு முந்தைய நாள் அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனிடமிருந்து தாக்குதல் தொடர்பான முக்கிய உளவுத்தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தாக்குதலைத் தடுக்க எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரமும் வாய்ப்பும் இருந்தபோதிலும் அவர் கடமையை நிறைவேற்றத் தவறியதாகவும் அதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட வழிவகுத்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் தனது அரச கடமையை புறக்கணித்ததுடன் கொலைக்கு உதவி மற்றும் ஊக்கமளித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என பெரும்பான்மை தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது.
எனினும் நீதியரசர் விராஜ் வீரசூரிய தனது சிறுபான்மை தீர்ப்பில் குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தாலும் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.













Leave a Reply