சீனாவின் ஷான்சி மாகாணத்தில் 82 பேரை பலிகொண்ட நிலக்கரி சுரங்க வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லியுஷென்யூ சுரங்கத்தில் இடம்பெற்ற இந்த பேரழிவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அதிகாரப்பூர்வ கண்காணிப்பில் இடம்பெறாத மறைவு சுரங்கப்பாதைகள் போலியான சுவர் கதவுகள் இரட்டை வரைபடங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆய்வாளர்கள் வரும்போது மறைவு சுரங்கங்களை மறைக்க போலி கல் சுவர் கதவுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் உண்மையான சுரங்க அமைப்பை மறைத்து “யின்-யாங் வரைபடங்கள்” எனப்படும் இரு தனி வரைபடங்கள் பராமரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல தொழிலாளர்கள் கட்டாய பாதுகாப்பு கண்காணிப்பு சாதனங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரத்தில் அதிகாரப்பூர்வ பதிவில் 124 பேர் மட்டுமே சுரங்கத்திற்குள் இருந்ததாக காட்டப்பட்ட போதிலும் உண்மையில் 247 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சீனாவில் 2009க்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாகக் கருதப்படுவதுடன் முழுமையான விசாரணை மற்றும் கடுமையான பொறுப்பேற்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.





Leave a Reply