பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விசேட மாநாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டுவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விடுத்த கோரிக்கை அதனைத் தொடர்ந்து அனுப்பிய கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னரே இந்த உறுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தோட்ட சமூக மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக மனோ கணேசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மே 10ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின்போதும் இச்சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே உடபுஸ்ஸல்லாவ காவல்துறைப் பிரிவில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் நிகழும் வன்முறைகளுக்கு அமைதியான மற்றும் உடன்பாடான தீர்வை காணும் நோக்கில் நடைபெறவுள்ள இந்த அவசர மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading