ஊடகவியலாளர் போராட்டம், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (31) ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌசல்யா ஆரியரத்னவின் இருநாள் யாழ்ப்பாணப் பயணத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்பதைத் தவிர்த்து யாழ்ப்பாண ஊடக அமையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகப் பணியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர்கள் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நிலுவை வழக்குகளும் பாரபட்சமற்ற முறையில் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.













Leave a Reply