கீரிமலை குப்பை, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட மேட்டில் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் தீயால் எழுந்துள்ள அடர்ந்த புகை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம்–கீரிமலை வீதியோரத்தில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய குழிகளில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு “சுகாதார நில நிரவுகை திட்டம்” என்ற பெயரில் இக்குழிகளை குப்பைகளால் மூடும் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் அண்மையில் மீண்டும் வலி.
தெற்கு பிரதேச சபையினரும் கடற்படையினரும் டிப்பர் வாகனங்கள் மூலம் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக வலி. வடக்கு பிரதேச சபை கூட்டத்தில் குப்பை கொட்ட அனுமதிக்கப்படாது என்றும் ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்மானத்தை மீறி குப்பைகள் கொட்டப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதேச சபையின் சுகாதாரக் குழுவினர் தலையிட்டு கடற்படையினரின் வாகனத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத குழுவொன்று தீ வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்து வரும் இந்த தீயால் ஏற்பட்டுள்ள புகை சுற்றுவட்டார மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Leave a Reply