உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகக் கலன்பிந்துணுவெவ, துடுவல, பரணகம, கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நிலையான தீர்வுகளை வழங்கத் தவறினால் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சந்தையில் உர விநியோகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் ஒரு மூடை உரத்தின் விலை 9,000 ரூபாவிலிருந்து 18,500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் இப்போகத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சந்தையில் ஒரு கிலோகிராம் நெல்லின் விலை 100 முதல் 105 ரூபா வரை குறைந்துள்ளதால் பயிர்ச்செய்கைக்காக செலவிட்ட முதலீட்டுத் தொகையைக்கூட மீட்டெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைப்பு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு உர மானியங்களை அதிகரிப்பதோடு உர விலையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து கொழும்பில் சிவில் போராட்டங்களை நடத்தத் தயார் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.





Leave a Reply