எரிபொருள் விலை உயர்வு – பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்பு.
பிரான்சில் எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக 2026 மார்ச் மாதத்தில் அரசுக்கு சுமார் 270 மில்லியன் யூரோ அளவிற்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அரசின் பொது கணக்குகள் மற்றும் நடவடிக்கை அமைச்சராக உள்ள டேவிட் அமியல் வெளியிட்டார்.
இந்த எரிபொருள் விலை உயர்வு வருவாயில் சுமார் 120 மில்லியன் யூரோ மதிப்பு எரிபொருளுக்கு விதிக்கப்படும் VAT (மதிப்புக்கூட்டல் வரி) மூலம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் விற்பனை அளவு அதிகரித்ததால் விதிக்கப்படும் பிற வரிகளில் இருந்து சுமார் 150 மில்லியன் யூரோ வருவாய் கிடைத்துள்ளது.
ஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்கு ஏற்பட்ட மொத்த பொருளாதார சுமையை விட மிகவும் குறைவானது என்று அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் மற்றும் உலகளாவிய ஆற்றல் சந்தை நிலைமாறுகள் காரணமாக அரசின் செலவுகள் அதிகரித்துள்ளன. இதுவரை இந்த பிரச்சினையை சமாளிக்க சுமார் 430 மில்லியன் யூரோ செலவிடப்பட்டுள்ளதாகவும் இதில் போக்குவரத்து, மீன்பிடி மற்றும் விவசாய துறைகளுக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் 2022ஆம் ஆண்டு போல பெரிய அளவிலான பொதுவான நிவாரண உதவிகளை அறிவிக்க தற்போது அரசிடம் போதுமான நிதி இல்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு குறிவைத்து சில உதவிகள் வழங்கப்படும் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையால் பிரான்சில் வாழ்க்கைச் செலவு உயர்வும் பொதுமக்களின் செலவுத்திறன் குறைதலும் குறித்து விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.





Leave a Reply