யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி பகுதியில் தொடரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன, இதில் 3 குழந்தைகளும் உள்ளடங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அகழ்வுப் பணி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் மே 2025 முதல் தொடங்கப்பட்டது. சட்ட மருத்துவ நிபுணர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாற்றுப் பின்னணி
செம்மணி புதைகுழி விவகாரம் முதன்முறையாக 1998–99ம் ஆண்டுகளில் உருவெடுத்தது. அப்போது, நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்களை புதைக்கப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு வெளியானது. 1999ல் 15 உடல்கள் மீட்கப்பட்டபோதும், அதற்குப் பிந்தைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.
அணையா விளக்கு – மக்கள் எதிர்ப்பு மற்றும் கோரிக்கைகள்
“அணையா விளக்கு” என்ற பெயரில் பொதுமக்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து 3 நாள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்திதியிருந்தனர். இதில்
- சர்வதேச வல்லுநர்களின் சுயாதீன கண்காணிப்பு
- DNA சோதனை மூலம் உடல்களின் அடையாளம் கண்டறிதல்
- பொறுப்பாளர்களை சட்டத்தின் முன் கொண்டு வருதல் போன்றவற்றை முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்தனர்.
ஐ.நா. மற்றும் சர்வதேச நிலைப்பாடு
Volker Türk ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர், ஜூன் 23–26 வரை இலங்கையில் வருகை தந்திருந்த நிலையில் அவருக்கு அகழ்வு தளம் / அணையா விளக்கு போராட்டக்களத்திற்கு செல்வதற்கான முழுப் பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவர் பொதுமக்கள், நீதிமன்ற செயலாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் நம்பிக்கையூட்டும் வகையில் கலந்துரையாடியிருந்தது மக்களின் போராட்டத்துக்கான பலனாக ஆறுதல் அளித்திருந்தது.
இதேவேளை ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசிடம் முழுமையான ஒத்துழைப்பையும், விசாரணை மீதான வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யக் கோருகின்றன.
நீதிமன்றம் தற்போது அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் கூடுதலாக அனுமதித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்பது தொடர்ந்து வெளிவரும்.
மேலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் போராட்டக்களத்துக்கு சென்ற அனைத்து தமிழ் அரசில்வாதிகளும் மக்களால் வெளியேற்றப்பட்டிருந்ததும் குறிப்பிடதக்கது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ‘நம்பகத்தன்மை கொண்ட கோப்புக்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் இவை அனைத்து Volker Türk கையில் ஒப்படைக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக தனக்கு பெரும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகவும் கூறியிருக்கும் விடயமானது மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.





Leave a Reply